Tuesday, May 5, 2009

கருணாநிதிக்கு கமல் tuition எடுக்கலாம்: ரீமேக் கம்பன் கொடுத்த ஐடியா

"தலைவன் இருக்கின்றான்' என்ற தலைப்பை மாற்றியதற்கு காரணம்?
அதை விட "உன்னைப்போல் ஒருவன்' என்ற தலைப்பு பொருத்தமாக இருந்ததால். தவிர, இது எழுத்தாளர் ஜெயகாந்தனின் தலைப்பு. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறேன்.[ ஒரு புதன்கிழமை என்று வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ]

சிறந்த கதாசிரியரான நீங்கள் ஒரு ஹிந்திப் படத்தை "ரீமேக்' செய்ய வேண்டிய காரணம்?

இது கம்பனிடமிருந்து வந்த "ஐடியா'; வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தமிழில் கம்பன் எழுதியதுதான் காரணம். நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் அதைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த "ரீமேக்'. ஹிந்தியில் இந்தக் கதையைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அந்த நல்ல விஷயத்தைத் தமிழகத்துக்கும் தர வேண்டும் என்ற ஆசைதான்.ஹிந்தியில் ஒரு பிரச்னையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பிரச்னை பெரிய விஷயமாக இருக்கும். ஜார்க்கண்டில் இனப் பிரச்னை என்றால் தமிழகத்தில் தற்போது ஈழப் பிரச்னை இருக்கிறது. தமிழுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து படத்தை உருவாக்கி வருகிறோம்.[ புதன்கிழமை தேசிய பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்ட படம். தேசிய பிரச்சனை தமிழ் நாட்டு பிரச்சனை இல்லை என்று சொல்ல வருகிறாரா கமல் ? தற்போது தமிழ்நாட்டு பிரச்சனை என்ன ? ]

அப்படியானால் இந்தப் படத்தில் ஈழப் பிரச்னை இடம்பெறுகிறதா?
இல்லை. ஈழப் பிரச்னை பற்றி ஒரு படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது. இப்போது அதற்கான தைரியம் இல்லை.

தமிழ் நடிகர்கள் பலர் இருக்க, மலையாள நடிகர் மோகன்லாலை இந்தப் படத்தில் நடிக்க வைப்பதற்கான காரணம்?
மொழிக்கு அப்பாற்பட்டது கலை. மோகன்லாலை அவர் இன்னார் இன்னார் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. அவர் மிகச் சிறந்த நடிகர். அவருடைய திறமைக்காகத்தான் இந்த வேடம். கடந்த சில ஆண்டுகளாகவே இணைந்து நடிக்க வேண்டும் என அடிக்கடி பேசிக் கொள்வோம். இப்போதுதான் சரியான களம் அமைந்திருக்கிறது.
படத்தின் சிறப்பம்சம்?
நல்ல கதை. மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுவது பலம். படத்தில் "ரெட்' கேமராவை முதல்முறையாகப் பயன்படுத்துகிறோம். காலை படமாக்கும் காட்சிகளை இரவில் "எடிட்' செய்துவிடலாம்.

"அன்பே சிவம்' உள்ளிட்ட உங்களுடைய சில தரமான படங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடையாததற்கு காரணம்?

சில சமயங்கள் அவ்வாறு நடப்பதுண்டு. யாரையும் குற்றம் சொல்லமுடியாது. எம்.ஜி.ஆரை விட அடித்தட்டு மக்களைச் சென்றடைந்த ஒருவர் இருக்க முடியாது. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரின் "பாசம்' என்ற நல்ல படம் 10 நாள்களைத் தாண்டி ஓடவில்லை.இதுபோன்ற விஷயங்களில் தோல்விகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் தொடர்ந்து நல்ல முயற்சிகளில் ஈடுபடுவேன். எல்லாத் தலைவர்களுமா தேர்தலில் வென்று விடுகிறார்கள்? தோற்றாலும் தொடர்ந்து அரசியலில் இருப்பதில்லையா? அதுபோலத்தான்.நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாசன், எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன், இரா.முருகன், யு டி.வி. மோஷன் பிக்சர்ஸ் ராம் மிர்சந்தானி, பட இயக்குநர் சக்ரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திரையுலகில் 50-ம் ஆண்டில் கமல்!தமிழ்த் திரையுலகம் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் சூழலில் நடிகர் கமல்ஹாசன் "உன்னைப்போல் ஒருவன்' படத்தின் மூலம் திரையுலகில் தனது 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.ஏ.வி.எம். நிறுவனம் தயாரிப்பில் கமல், குழந்தை நட்சத்திரமாக நடித்த "களத்தூர் கண்ணம்மா' 1959 ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியானது."உன்னைப்போல் ஒருவன்' படத்தின் அனைத்துப் பணிகளும் மே மாதம் நிறைவடைந்து, ஜூன் இறுதியில் வெளியாகத் தயாராகிவிடும். இருப்பினும் ரசிகர்கள், திரையுலக நண்பர்கள் அனைவரின் விருப்பப்படியும் பொன்விழாவை முன்னிட்டும் "களத்தூர் கண்ணம்மா' வெளியான ஆகஸ்ட் 12-ம் தேதி "உன்னைப்போல் ஒருவன்' படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments: